தஞ்சாவூர், ஜூன் 11: செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது. தஞ்சாவூர் மாவட்டம் மேம்பாலம் அருகில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை சீருடை, பாட புத்தகங்கள், பாடக் குறிப்பேடுகள் மற்றும் கல்வி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் தங்கி படிக்க இலவச உணவுடன் கூடிய தனித்தனி விடுதி வசதி உள்ளது.
இங்கு அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் திறன் வகுப்பறைகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களின் வழியாக மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, செவித்திறன் குறைந்த மாணவ, மாணவிகள் இந்த பள்ளியில் சேர்த்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.