தஞ்சாவூர், ஜூன் 10: தஞ்சையில் நேற்று அதிகாலை சாலை தடுப்பு கட்டையில் பஸ் மோதி விபத்து, 7 சுற்றுலா பயணிகள் காயம், மற்றவர்கள் சிறுகாயம் ஏற்பட்டது. ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இருந்து 36 பேர் தஞ்சாவூரில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக தனியார் சுற்றுலா பஸ்சில் புறப்பட்டனர். இந்த பஸ் நேற்று அதிகாலை தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கரந்தை கோடி அம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் எதிர்பாராத விதமாக சாலையில் நடு தடுப்பு கட்டையில் மோதி நின்றது. உள்ளே இருந்த சுற்றுலா பயணிகள் கூக்குரலிட்டனர். பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். சில பயணிகள் கண்ணாடி வழியே வெளியே குதித்தனர்.
தகவல் அறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.