தஞ்சாவூர்: தினகரன் செய்தி எதிரொலியாக தஞ்சாவூர் விளார் புறவழிச்சாலை ஓரத்தில் மருத்துவ கழிவு கொட்டிய ஆட்டோவை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூரை அடுத்த விளார் புறவழிச்சாலை பகுதிகளில் சாலை ஓரத்தில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து குவியல், குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. இது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், கலெக்டர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.அதன் பேரில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மதியழகன் ஆகியோர் மேற்பார்வையில், ஊராட்சி தலைவர் மைதிலி ரத்தினசுந்தரம் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் புறவழிச்சாலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, நள்ளிரவு 1 மணிக்கு சரக்கு ஆட்டோவில் மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டிய போது, அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தனர். அந்த வாகனம் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிகளை ஏற்றிக் கொண்டு வந்து அங்கு கொட்டியது தெரியவந்தது.இதையடுத்து, அந்த ஆட்டோவுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் சமூக இடத்திற்கு வந்து சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில், ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன், தஞ்சாவூர் தெற்கு போலீஸ் நிலையத்தில், தஞ்சாவூரில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகள் மீது புகார் அளித்தார்.அதில் மருத்துவமனை கழிவுகளை முறையான சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல் புறவழிச் சாலையில் பொதுமக்களுக்கு நோய்களை பரப்பு வகையில் கொட்டியதாக அந்த மருத்துவமனைகளின மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டிருந்தது. புகாரின் பேரில் தஞ்சாவூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….