தஞ்சாவூர், ஏப்ரல்22: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூரில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் 420 பேர் கடந்த 20 வருடமாக வேலை பார்த்து வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் வழங்கும் சட்டப்படி அரசாணை எண் 62ன் கீழ் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் தூய்மை பணயிாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாநகராட்சி முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமையில் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கைகளை விளக்கி ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா ஆகியோர் உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு, அரசால் நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி 760, ஓட்டுனர்களுக்கு 798ஐ உடனே வழங்கிடவும், கடந்த ஓராண்டுக்கு மேலாக ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட, PF, ESI,தொகையை இதுவரை தங்களது கணக்கில் வரவு வைக்காத, ஒப்பந்தக்காரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்திடவும், ஒவ்வொரு மாதமும், ஐந்தாம் தேதிக்குள், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், ஆண்டுக்கு இரண்டு செட் யூனிஃபார்ம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் துணைத் தலைவர் ஆனந்தராஜ், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,முனியம்மாள், இளவரசன், சேகர், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகம் தங்களை அழைத்து பேசி தீர்வு காணவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்று தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.