தஞ்சாவூர், ஏப்.28: நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் நம்மாழ்வார் பிறந்த மாதமான ஏப்ரல் மாதத்தில் நம்மாழ்வார் சித்திரை திருவிழா தஞ்சாவூரில் 25ம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற்றது. இறுதி நாளான நேற்று நடைபெற்ற நிகழ்விற்கு நம்மாழ்வார் மக்கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்வில் முன்னாள் இந்திய ஐஏஎஸ் அதிகாரி ஞானராஜசேகரன் கலந்து கொண்டு இன்றைய அரசியல், மக்கள் பிரச்சனைகள், கோரிக்கைகள், குடிமை சமூக அதிகாரம் குறித்து சிறப்புரையாற்றினார். உள்ளாட்சி அமைப்புகளும் செயல்பாடுகளும் என்ற தலைப்பில் பேராசிரியர் க.பழனிதுரை, மக்களும் இன்றைய சட்ட பிரச்சனைகளும் என்ற தலைப்பில் முன்னாள் காவல்துறை டிஜிபி ராமகிருஷ்ணன், மக்கள் ஒருங்கிணைப்பில் அணுகுமுறைகள் குறித்து நல்லோர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் பாலு, மக்களை ஒருங்கிணைப்பதில் புதிய பிரச்சனைகள் குறித்து சமூக செயற்பாட்டாளர் மதுரை செல்லச்சாமி, இன்றைய இளைஞர்களின் செயல்பாடும், அர்ப்பணிப்பும் என்ற தலைப்பில் மூத்த வழக்கறிஞர்கள் திருச்சி பாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன், சிந்தனை சொற்பொழிவு என்ற தலைப்பில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் மணிவண்ணன், எஸ்.செந்தூர் பாரி, செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து மாடித்தோட்டம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபாகரன், நாட்டு காய்கறிகள் தரும் வாழ்க்கை குறித்து வானவன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
சமூக செயற்பாட்டாளர்கள் சென்னை போதை ஒழிப்பு இயக்கத்தின் சுந்தர், அரியலூர் பெரியசாமி, தில்லைநாயகம், கருணாகர சேதுபதி, தஞ்சாவூர் விசிறி சாமியார் மற்றும் சோழ மண்டல முன்னாள் ராணுவ படை வீரர்கள் அமைப்பினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாலையில் மகளிர் அரங்கம் சார்பில் இன்றைய விடுதலை என்ற தலைப்பில் பேராசிரியர் சித்ரா, எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் இந்திரா அரசு, யாழினி தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர். விழா நிகழ்ச்சியில் ஆதி தமிழ் நிலத்தின் மண்ணையும் மக்கள் பண்பாட்டையும் பாதுகாப்போம், தமிழ்நாட்டின் மூத்த ஆறுகள், நீர்நிலைகளை அழிவிலிருந்து பாதுகாப்போம் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.