தஞ்சாவூர், ஏப். 24: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து பல்வேறு நல உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று வழங்கினார். நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றுள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்கு காலை மற்றும் இரவு வேலைகளில் அரசு சார்பில் உணவு வழங்கிட 82 மாணவர்களுக்கு தலா ரூ.30 வீதம் 31 நாட்களுக்கு ரூ.76,260 க்கான காசோலையினை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரனிடம் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். மேலும் பூதலூர் வட்டம் தோகூர் கிராமம் ராமசுப்பிரமணியன் என்பவருக்கு வாழ்வாதார நிதி உதவியாக ரூ.20,000க்கான காசோலையினையும்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து நீட் பயிற்சி பெற்றுள்ள மாணவர்களுக்கு பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் அரசு சார்பில் உணவு வழங்கிட 82 மாணவர்களுக்கு ரூ.76,600 காசோலையினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளம் தூர்வரும் பணிகள் மேற்கொள்ள ரூ.90.331 க்கான காசோலையினை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரிடம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குனர் பாலகணேஷ், முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், உயர்கல்வி ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ், ராம், காயத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.