வேலூர், செப்.6: மழைக்காலம் தொடங்கியுள்ளதால், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கோடை வெயில் முடிந்த பிறகும், வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வந்தது. கடந்த வாரம் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இதற்கிடையில், பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், சுத்தமான தண்ணீரில் வளரக்கூடிய ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன்மூலம் டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி டெங்கு தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்கி, அதில் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும். ஆரம்பத்திலேயே தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் இடங்கள் குறித்து உடனடியாக தகவல் அளிக்கவும், போதிய அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், வாளி, டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் இருந்தால், அதனை அகற்றி சரிசெய்யும்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொசுக்களின் உற்பத்திக்கு காரணமான டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை அகற்ற வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடு சுற்றுப்புறங்களை துாய்மையாக பராமரிக்க வேண்டும்.
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான ஆய்வை முன்னெடுத்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஒத்துழைப்பை கல்வி நிறுவன நிர்வாகங்களும், உள்ளாட்சி அமைப்புகளும் அவசியம் வழங்க வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் கொசுப் புகை மருந்து அடிக்க வேண்டும். அதேபோல் மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளை சுத்தமாகவும், குளோரின் கலந்தும் பராமரிக்க வேண்டும். கொசுப்புழுக்கள் அங்கு உற்பத்தியாகாத வகையில் மூடி வைப்பது முக்கியம். மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக துணை சுகாதார இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன்பேரில் சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.