வேடசந்தூர், நவ. 9: வடமதுரை அருகேயுள்ள எம்.வி.நாயக்கனூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (62). பூ வியாபாரி. இவர் கடந்த நவ.6ம் தேதி திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் அருகே தீத்தாகிழவனூர் பகுதியில் பூக்களை விற்க சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் எஸ்.குரும்பபட்டியை சேர்ந்த பாண்டியராஜ் (21) ஓட்டி வந்த டூவீலர் இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை எஸ்ஐ கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.