பழநி, நவ. 21: உளுந்து பயிரில் டிஏபி கரைசல் தெளித்தால் 25% கூடுதல் மகசூல் பெறலாமென வேளாண் உதவி இயக்குநர் காளிமுத்து தெரிவித்துள்ளார். தொப்பம்பட்டி வட்டாரத்தில் தற்போது சுமார் 6 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உளுந்து பயிரில் 25% வரை கூடுதல் மகசூல் பெற 2% டிஏபி கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமான தொழில்நுட்பமாகும்.
1 ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டிஏபி உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாளே ஊறவைத்து நன்கு கலக்கிவிட வேண்டும். மறுநாள் தெளிந்த கரைசலை மட்டும் வடிகட்டு எடுத்துக் கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை நேரங்களில் கைத்தெளிப்பான் கொண்டு 1 ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும். 35வது நாள் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 45வது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் ஒரு முறையும் தெளிக்க வேண்டும்.
மண்ணில் ஈரப்பதம் இருக்கும்போது டிஏபி கரைசல் தெளிப்பது சிறந்ததாகும். இவ்வாறு செய்வதால் மண்ணிலிருந்து நேரடியாக மணிச்சத்தை எடுத்துக்கொள்ள முடியாத பயிர்கள் டிஏபி கரைசல் மூலமாக இலை வழியாக மணிச்சத்து அளிக்கும்போது, பயிர்கள் உடனடியாக மணிச்சத்தை பெறும். இதனால் 1 ஏக்கரில் 25% முதல் 30% வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே, உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிஏபி கரைசல் தெளித்து பயன்பெற வேண்டுமென தொப்பம்பட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.