கோவை ஜூலை 5: கோவை கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாசல் முன் நேற்று காலை அதிகாரிகளை சந்திக்க வரும் பொதுமக்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் வெள்ளை சட்டை, பேண்ட் அணிந்த நிலையில் வந்தார். அவரை போலீசார் விசாரிக்க முயன்றபோது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். அப்போது அந்த வாலிபர் கோபம் அடைந்தார். ‘‘நான் கேரளாவில் இருந்து வருகிறேன்.
கோவையில் காலை 7 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் லங்கா கார்னர் பகுதியில் டாஸ்மாக் கடை முன் மது பாட்டில் வாங்கி குடித்தேன். அப்போது என்னிடம் இருந்த பணம் 50 ஆயிரம், செல்போன் போன்றவற்றை அங்கே இருந்தவர்கள் பறித்து கொண்டார்கள். அதை பெற்று தர வேண்டும்’’ என்றார். இதை கேட்ட போலீசார் அவரை அங்கேயிருந்து செல்லுமாறு கூறினர்.
ஆனால் அவர் செல்ல மறுத்து அடம் பிடித்தார். பணத்தை வாங்கி கொடுங்கள். நீங்கள் எதுவும் விசாரிக்காமல் போக சொல்கிறீர்கள். சட்ட விரோதமாக மது பாட்டில் விற்கிறார்கள் என கூறி வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டார். அவரை போலீசார் போலீஸ் வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது அவர் பெயர் ராஜேந்திரன் (40) என தெரிய வந்தது. ேபாலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர்.