திருத்தணி, ஏப்.18: திருத்தணி அருகே, வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள அரசு பள்ளியில் தொடக்க கல்வியை கற்று, கல்வியில் சிறந்து விளங்கி ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். நாட்டின் 2வது குடியரசு தலைவர் என்ற பெருமை பெற்றவர். அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் பிறந்த வெங்கடாபுரம் கிராமத்தில் ராதாகிருஷ்ணனுக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும் என்று அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று டாக்டர் ராதாகிருஷ்ணனின் 50வது நினைவுநாள் வெங்கடாபுரம் கிராம மக்கள் சார்பில் அனுசரிக்கப்பட்டது. சுமை தூக்கும் தொழிலாளி பி.டி.சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு, ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவுநாள் அனுசரிப்பு
0