சிவகாசி, ஜூன் 18:சிவகாசி ஆனையூர் ஊராட்சி முனீஸ்நகரை சேர்ந்தவர் மகேஸ்வரன்(35). சிவகாசி ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் திருத்தங்கல் திருவள்ளுவர் காலனியை சேர்ந்த வழக்கறிஞர் கணேசன்(52) என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நீதிமன்றம் மூலம் தீர்வு காண அறிவுறுத்தினர். சம்பவத்தன்று சிவகாசி நீதிமன்றத்திற்கு சென்ற டாக்டர் மகேஸ்வரனை, அங்கு வந்த வழக்கறிஞர் கணேசன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த டாக்டர் மகேஸ்வரன் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து வழக்கறிஞர் கணேசன் மீது திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.