போச்சம்பள்ளி, மே 8: மத்தூர் ஏரியில் டன் கணக்கில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள், ‘தினகரன்’ செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது. போச்சம்பள்ளி அடுத்துள்ள மத்தூர் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொது மக்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள் வெளியூர் செல்ல மத்தூர் வந்துதான் செல்ல வேண்டும். மேலும் பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி, மேல்மருவத்தூர், திருவண்ணாமலை மற்றும் சென்னை, திருப்பதி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் மத்தூர் வழியாகதான் செல்ல வேண்டும் என்பதால், மத்தூர் முக்கிய பகுதியாக உள்ளது. மத்தூர் அருகில் ஏரி உள்ளது. இந்த ஏரி பகுதியில் டன் கணக்கில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது.
மத்தூர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளை அனைத்தும் ஏரியில் கொட்டப்படுவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், சுகாதார அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மத்தூர் ஏரியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை பார்வையிட்ட கிருஷ்ணகிரி உதவி இயக்குனர் மகாதேவன், மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்லக்கண்ணாள், சாவித்திரி, ஊராட்சி செயலர் வெங்கடேசன் ஆகியோர் பொக்லைன் மூலம் மருத்துவ கழிவுகளை நேற்று அகற்றினர்.