கோபி, ஏப்.24: சாலை வரி, உதிரிபாகங்கள் விலை உயர்வு, காப்பீடு கட்டண உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கோபி வட்டார ஜேசிபி உரிமையாளர்கள் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோபி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஜேசிபி வாகனங்கள் கட்டுமான தொழில், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த ஜேசிபி வாகனங்களின் காப்பீடு கட்டணம், உதிரி பாகங்கள் விலை கடும் உயர்வு, சாலை வரி உயர்வு, ஓட்டுநர் கூலி உயர்வு போன்றவற்றால் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், சாலை வரி, காப்பீடு கட்டணம், உதரி பாகங்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், வாடகை உயர்வை அமல்படுத்த வலியுறுத்தியும் கோபி வட்டார ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத்தினர் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.இதனால், கோபி பகுதியில் கட்டுமான பணிகள், சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.