ஜெயங்கொண்டம், ஏப்.17: ஜெயங்கொண்டம் நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் நகர மக்களுக்கான குடிநீர், சாலைவசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலக கூட்டரங்கில் நகரமன்ற உறுப்பினர்களின் சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார். நகர மன்ற துணைத் தலைவர் கருணாநிதி, நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சி மேலாளர் அன்புசெல்வி தீர்மானங்களை வாசித்தார். நகராட்சியின் செலவினங்கள் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் செல்வராஜ், ரங்கநாதன், கிருபாநிதி, பாண்டியன், துர்காஆனந்த், மீனாட்சி நடராஜன் மற்றும் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் ஜின்னா, நகராட்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், அடிப்படை வசதிகளான குடிநீர், தார் சாலை, சிமெண்ட் சாலை, தெருவிளக்கு, 4ரோடு பகுதியில் பொதுக்கழிப்பறை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நகர்மன்ற உறுப்பினர்கள் முன்வைத்தனர். உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டபடி அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் கூறினார். பின்னர் அனைவருக்கும் நகராட்சி பொறியாளர் நன்றி கூறினார்.