ஜெயங்கொண்டம், ஏப்.22: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய டோக்கன் முறை அமல்படுத்தப்படுவதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் விற்பனைக்குழுவின் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினசரி ஏலம் நடைபெற்றுவருகிறது. நாள் ஒன்றுக்கு 750 முதல் 1000 விவசாயிகள் வரை தங்களின் விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டுவந்து நல்ல விலைக்கு விற்று பயன் பெறுகின்றனர். இந்நிலையில் இவ்விற்பனைக்கூடமானது முழுவதுமாக (e-NAM) தேசிய வேளாண் சந்தை முறை மூலம் ஏலம் நடைபெறுவதால் அவ்வப்போது இணையதள சேவையில் ஏற்படும் பிரச்சனைகள்,
விவசாயிகள் காத்திருப்பு நேரம் குறைக்க முன்வைத்த கோரிக்கை மற்றும் வியாபாரிகள் கேட்டுக்கொண்ட வேண்டுதல்கள் ஆகியவற்றை மிகவும் கவனமாக பரிசீலனை செய்து நாளை (23ம் தேதி) புதன்கிழமை முதல் முன் அனுமதி (டோக்கன்) முறை கடைபிடிக்கப்படவுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாலை 3 மணியளவில் விற்பனைக்கூடத்திற்கு நேரில் வந்து டோக்கன் பெற்றுக்கொண்டு அந்த டோக்கனில் குறிப்பிடும் நாட்களில் தங்களின் விளைபொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்து பயனடைய என்று ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆரோக்கியசாமி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.