ஜெயங்கொண்டம், ஏப். 11: தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும், தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி மலர் வாலன்டிணா ஆலோசனைப்படி சமரச விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமாகிய லதா தலைமை வகித்தார். சமரச விழாவை முன்னிட்டு பேரணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து கழுவந்தோண்டி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணியை சார்பு நீதிபதி லதா துவக்கி வைத்தார்.
பேரணியில் சிறப்பு சார்பு நீதிமன்ற நீதிபதிகள் ராஜ மகேஸ்வரன், அனிதா கிறிஸ்டி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜசேகரன், பாலமுருகன் , கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு துண்டு பிரச்சாரங்களை வழங்கினார்கள்.கழுவன் தோண்டி பேருந்து நிலையத்தில் பேருந்துகளிலும், மினி பேருந்துகளிலும் ஏறி நீதிபதிகள் துண்டு பிரசுரங்களை வழங்கி சமரச மையத்தின் சிறப்புகளையும், அதனுடைய செயல்பாடுகளையும் விளக்கிக் கூறினர்.
வழக்கறிஞர் ராஜலட்சுமி பூங்கொடி மற்றும் நீதிமன்ற ஊழியர் உஷா ஆகியோர் நாடகமாக நடித்து சமரச மையத்தின் சிறப்பையும், பயன்பாட்டையும் வெளிப்படுத்தினர். வட்ட சட்ட பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் புனிதா சமரசமையத்தின் சிறப்புகளை பற்றி கவிதை நடையில் விளக்கினார். இப் பேரணியின் ஏற்பாடுகள் அனைத்தையும் சமரச மையத்தின் உதவியாளர் விஸ்வநாதன் நீதிமன்ற ஊழியர்களுடன் இணைந்து செய்திருந்தார்.