Thursday, June 19, 2025
Home மாவட்டம்கோயம்புத்தூர் சொத்து கைமாறி போச்சு… பாசமெல்லாம் வேஷமாச்சு…

சொத்து கைமாறி போச்சு… பாசமெல்லாம் வேஷமாச்சு…

by Neethimaan

கோவை, மே 20: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில் மைலம்பட்டி பகுதியை சேர்ந்த 80 வயதான பெண் அளித்த புகார் மனுவில், ‘‘எனக்கு மூன்று மகள் உள்ளனர். 2வது மகள் என்னையும், என் கணவரையும் பார்த்து கொள்வதாக கூறினார். நான் அவரின் பேச்ைச கேட்டு நான் வசித்த வீட்டை அவரின் பெயருக்கு எழுதி வைத்தேன். சொத்து வந்த பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே என் கணவர் இறந்து விட்டார். இந்த நிலையில் என்னை கவனிக்காமல் என் மகள் என்னை உதாசினப்படுத்தி வருகிறார். எந்த ஆதரவும் இன்றி நான் தவிக்கிறேன். நான் வசித்த வீட்டை எனக்கு மீட்டு தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். ஆனைமலை ராமச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த 82 முதியவர் அளித்த புகார் மனுவில், ‘‘எனக்கு 25 ஏக்கர் நிலம் இருந்தது.

எனக்கு 2 மகன்கள் உள்ளனர். எனது சொத்துக்களை பிரித்து மகன்களுக்கு தந்து விட்டேன். இந்த நிலையில் என் மூத்த மகன் எனது 6.65 சென்ட் இடத்தை தர சொல்லி டார்ச்சர் செய்கிறார். என் தோட்டத்தில் இருந்து தேங்காய்களை திருடி சென்றுவிட்டார். எனது இடத்திற்கு நான் பட்டா கேட்ட போது அதை தர விடாமல் தடுத்து மிரட்டுகிறார். இது தொடர்பாக ஆனைமலை போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது இடத்தில் தேங்காய்களை குவித்து வைக்கிறார். அவரால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. வயதாகிவிட்டதால் உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கிறேன். வீட்டில் வசிக்க முடியாமல் தம்பி வீட்டிற்கு போய் விட்டேன். எனது நிலத்தை நான் பயன்படுத்த உதவி செய்ய வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

காரமடை டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த நர்சாக பணியாற்றும் அனிதா (43) என்பவர் அளித்த புகார் மனுவில், ‘‘எங்கள் வீட்டில் வாடகைக்கு கமலேஷ் (52), அவர் மனைவி சிரிலா (45) ஆகியோர் வசித்து வந்தனர். எனக்கு புனேவில் ஒன்றிய அரசு துறையில் நர்சு பணி வாங்கி தருவதாக கூறி இவர்கள் கடந்த 2018ம் ஆண்டில் 10 லட்ச ரூபாய் வாங்கினார்கள். வேலை வாங்கி தரவில்லை, கொடுத்த பணத்தை திருப்பி தரவில்லை. மேலும் அவர்கள் ஒரு செக் அளித்தனர். இதில் பெயர் மற்றும் ரூபாய் விவரங்கள் தவறாக இருந்தது. இதனால் பணம் பெற முடியவில்லை. பணத்தை வாங்கி மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காரமடை போலீசில் புகார் தந்து 5 மாதமாகியும் இதுவரை விசாரிக்கவில்லை’’ என்றார்.

குளத்து பாளையம் விநாயகர் கோவில் வீதி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘‘பாலக்காடு மெயின் ரோட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் எங்கள் பகுதி அமைந்துள்ளது. குளத்துப்பாளையம் ரோடு 30 அடி ரோட்டை ஓம் சக்தி கோயில் பகுதியில் முடிவடைகிறது. இந்த ரோட்டை ஒட்டியுள்ள பகுதியில் சுமார் 100 வீடுகள் இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகாலமாக இந்த பகுதியில் வாழ்ந்து வருகிறோம். ஏற்கனவே உள்ள 30 அடி சாலையை 60 அடி சாலையாக விரிவாக்கம் செய்யப்போவதாக தகவல் வந்தது. இந்த பகுதியில் ரோடு விரிவாக்கம் செய்தால் பல வீடு கட்டிடங்கள் இடிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்த பகுதிக்கு வர பக்கத்தில் உள்ள ரோடுகள் சீரமைக்கப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் இல்லாத இந்த பகுதியில் கட்டிடங்களை இடித்து ரோடு அகலமாக்க அவசியம் இல்லை. எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது’’ என தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi