சேலம், மே 11:சேலம் மாநகரில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, லாட்டரி ஆகியவற்றை முற்றிலும் ஒழிப்பதற்காக காவல்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினர் டீ கடை, பெட்டி கடைகளில் குட்கா விற்பனை செய்வோரை ரகசியமாக கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வாறு கடந்த 3 ஆண்டுகளை விட கூடுதலாக குட்கா, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதத்தில் மட்டும் மாநகரில் 5 டன் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 100 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பார்சல் சர்வீஸ் மூலமாக வரும் போதை மாத்திரைகளையும் கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு கூறுகையில், உதவி கமிஷனர்கள் தலைமை யில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்களை யாரும் விற்பனை செய்யக்கூடாது, அதனையும் மீறி விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது’ என்றார்.