கேடிசி நகர், செப். 12: நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கணாங்குளம் குடுகுடுப்பான் நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அய்யப்பன் (30). இவருக்கு திருமணமாகி இசக்கியம்மாள் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அய்யப்பன் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அய்யப்பன் மனைவியை அடித்து உதைத்து துரத்தியுள்ளார். பின்னர் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு தூக்கில் தொங்கியுள்ளார். இதனைப் aபார்த்த அக்கம் பக்கத்தினர் சேரன்மகாதேவி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அய்யப்பன் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.