நாகப்பட்டினம், ஏப். 22: தமிழ் வளர்ச்சித்துறையின் நடப்பு ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில் தமிழுக்கு செம்மொழித்தகுதி பெற்றுத் தந்த கலைஞரின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான ஜீன் மாதம் 3ம் தேதி அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்படும் என வெளியிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 2025ம் ஆண்டு கலைஞரின் பிறந்த நாளான ஜீன் மாதம் 3ம்தேதி செம்மொழி நாள் விழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட அளவில் 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் மே மாதம் 9ம் தேதி நாகப்பட்டினம் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் 10ம் தேதி நாகப்பட்டினம் வெளிப்பாளையம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவர்கள் பெயர்ப்பட்டியலை மயிலாடுதுறை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், கல்லூரி மாணவர்கள் பெயர்ப்பட்டியலை தஞ்சாவூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரும் தெரிவு செய்து அனுப்புவர். 11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.