சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியால் 66 கி.மீ நீளமுடைய 18 சாலைகளில் குப்பையில்லா பகுதிகள் (Litter Free Corridors) என அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், உர்பேசர் மற்றும் சுமீத் நிறுவனத்தின் சார்பில் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும், சென்னை என்விரோ நிறுவனத்தின் சார்பில் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் (சில பகுதிகள்) மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திடக்கழிவுகளை சாலை மற்றும் பொது இடங்களில் கொட்டுவது அல்லது தூக்கி எறிவதை தடுக்க மாநகராட்சியின் சார்பில் மேற்குறிப்பிட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திடக்கழிவு மேலாண்மையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் குப்பையில்லா பகுதிகள் (Litter Free Corridors) என்ற திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 18 சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு மாநகராட்சியின் சார்பில் குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிய வகை குப்பைத் தொட்டிகள் அமைத்தல், சிறிய குப்பைத் தொட்டியுடன் கூடிய மிதி வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை ரோந்து பணியில் ஈடுபடுதல், சாலைகளில் குப்பைகளை கொட்டும் நபர்களின் மீது அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த 66 கி.மீ நீளமுடைய 18 சாலைகளில், 196 பேருந்து நிறுத்தங்கள் குப்பையில்லாமல் தூய்மையுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த 18 சாலைகளை குப்பையில்லாமல் பராமரிக்க 270 தூய்மைப் பணியாளர்கள் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தூய்மைப்பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், 222 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு 52 வருகிறன்றன. இந்நிலையில் குப்பையில்லா பகுதிகள் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் சாலைகளில் குப்பைகளை கொட்டிய தனிநபர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி ரூ.39,000 அபராதம் வசூலிக்ககப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை தூய்மையாக பராமரித்திடும் வகையில் பொதுமக்கள் கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்திட வேண்டும். குறிப்பாக குப்பைகள் இல்லா சுத்தமான பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்த 18 சாலைகளை சுத்தமாக வைத்திடவும் குப்பைகளை அப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியிலோ அல்லது அப்பகுதியில் வருகை தரும் குப்பைகளை சேகரிக்கும் வாகனத்தில் வழங்கிடவும் கேட்டுகொள்ளப்படுகிறது….