Monday, June 5, 2023
Home » சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்: நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம்: நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்

by kannappan

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல், ஒன்றிய அரசின் நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முக்கியத்துவம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளது.சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொது செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட அனைத்து மக்களவை, மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள ஒன்றிய அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, கூட்டத் தொடர் மற்றும் குடியரசுத் தலைவர் உரை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் திமுக சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.அதுபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்தும்-அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறை குறித்து ‘பிபிசி’ வெளியிட்ட ஆவணப் பட சர்ச்சை-இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து வெளிவந்துள்ள அறிக்கை மற்றும்  இந்திய அரசமைப்பின் அடிப்படை பண்புகளை மாற்றி அமைக்கும் முயற்சியாக, குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்ட சிலர் தெரிவிக்கும் தேவையற்ற கருத்துகள் குறித்தும், நாடாளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைத்திட, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோன்று, தமிழ்நாடு அரசால், ஒன்றிய அரசுக்கு எழுதப்பட்டுள்ள கடிதங்களின் நிலை குறித்தும் – முக்கியமாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது; தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது, கைது செய்வது, படகுகளை இலங்கை ராணுவம் பறிமுதல் செய்து நாட்டுடைமை ஆக்குவது; சிறுபான்மையினர் மாணவர்களுக்கு 1 முதல் 8ம் வகுப்பு வரை வழங்கி வந்த மெட்ரிக் கல்வி உதவித் தொகையை நிறுத்தியது, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிப்பது; மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது; சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது; கால்நடைகளை கோமாரி நோயிலிருந்து தடுக்கும்  தடுப்பூசிகளைப் பெறுவது; தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது, என்.எல்.சி. நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது; இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும் – அகில இந்தியாவில் எதிரொலிக்கும் பிரச்னைகள் குறித்தும் இரு அவைகளிலும் குரல் எழுப்ப வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi