ராமநாதபுரம், ஜூன் 16: சர்வதேச கூட்டுறவு ஆண்டு 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தமிழக கூட்டுறவுத்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. ஒருவருக்காக எல்லோரும் ஓடுவோம்-எல்லோரும் ஓடி கூட்டு உறவாகுவோம்’ என்ற தலைப்பில் ‘சமத்துவம் கூட்டுறவின் மகத்துவம், கூடுவோம். ஓடுவோம். கூட்டுறவால் உலகை வெல்வோம்’ என்ற கருப்பொருளை கொண்டு, சென்னை தீவுத்திடலில் ஜூலை 6ம்தேதி காலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அனைவரையும் இப்போட்டியில் பங்கேற்க அழைக்கிறார். 5 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டியானது சென்னை தீவுத்திடலில் தொடங்கி சுவாமி சிவானந்தா சாலை வழியாக மன்றோ சிலை சென்று மீண்டும் சென்னை தீவுத்திடலில் வந்து முடிவடைகிறது.
இப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். போட்டிக்கான வயது வரம்பு 18-40, 40 மற்றும் அதற்கு மேல் ஆகும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசு ரூ.20,000, மூன்றாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். ஒற்றுமைத் திருவிழாவில் பங்கேற்க https://www.tncu.tn.gov.in/marathon/register to என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து நுழைவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 97909 54671 செல்போன் அல்லது Incu08@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.