திருக்கழுக்குன்றம், அக். 23: சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பிரித்தா (25). இவர் சென்னையிலுள்ள ஒரு ஐடி கம்பெனியில் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இவருடன் பணியாற்றும் விஜய் (30). இவர்கள் இருவரும் காதலர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் நடக்கின்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்காக பிரித்தாவும், விஜய்யும் நேற்று மாலை பைக்கில் இசிஆர் சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, கல்பாக்கம் அடுத்த இளையனார் குப்பம் சென்டர் மீடியன் மீது பைக் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்த பிரித்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த சதுரங்கப்பட்டிணம் போலீசார் படுகாயமடைந்த விஜய்யை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.