கே.வி.குப்பம், ஜூலை 4: கே.வி.குப்பம் பஸ் நிலையம் எதிரே சென்டர் மீடியனில் பெயின்ட் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெயின்ட் சாலையில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பெயின்ட் டப்பாக்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு கன்டெய்னர் லாரி சென்றது. லாரியை திருவண்ணாலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த முருகன்(43) என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 2 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்- காட்பாடி சாலையில் கே.வி.குப்பம் பஸ் நிலையம் அருகே வந்தது.
அப்போது திடீரென பஸ் நிலையம் எதிரே உள்ள சாலை சென்டர் மீடியனில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்புறம் சேதமானது. லாரி மோதிய வேகத்தில் கன்டெய்னரில் டப்பாக்களில் இருந்த பெயின்ட் சாலையில் வழிந்து ஆறுபோல் ஓடியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் அதிர்ஷ்டவமாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில், டிரைவர் தூக்க கலக்கத்தில் சென்டர் மீடியனில் மோதியது தெரியவந்தது. இதற்கிடையில் சாலையில் கொட்டிய பெயின்டால் அதிகாலை முதல் அவ்வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரியை போலீசார் மீட்டனர். மேலும் சாலையில் இருந்த பெயின்ட்டையும் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.