கறம்பக்குடி, ஏப். 26: புதுக்கோட்டை மாவட்டம், முள்ளங்குறிச்சி ஊராட்சி, செட்டி விடுதி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்த ஓட்டு கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. எனவே, அதன் காரணமாக அப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் பள்ளி வளாகம் முன்பு மரத்தடியில் ஒருவித பயத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.
எனவே, அப்பகுதியில் உள்ள பெற்றோர் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பழுதடைந்து காணப்படும் பள்ளி கட்டிடத்தை இடித்து அரசு புதிய பள்ளி கட்டிடம் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி குறிப்பாக செட்டி விடுதி பகுதி பெற்றோர் பொதுமக்கள் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.