புழல், மே 27: செங்குன்றம், வடகரை, கிரான்ட் லைன், அழிஞ்சுவாக்கம், தீர்த்தங்கரையம்பட்டு, புள்ளி லைன், பாடியநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் வீடுகள், தொழிற்சாலைகள், நெல் அரிசி ஆலைகள் உள்ளன. இந்நிலையில் மின்சாரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பல நேரங்களில் குறிப்பாக கோடை காலங்களில் வீடுகளில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு போதுமான அளவிற்கு மின்சாரத்தை செங்குன்றம் மின்சார வாரியம் வழங்க மிகவும் சிரமப்படுகிறது.
இதற்காக செங்குன்றம் மின்சார வாரியம் சார்பில் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் சுமார் 50 சென்ட் நிலம் மின்சாரத் தேவைக்காக துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடம் மேய்ச்சல் புறம்போக்கு மற்றும் கால்நடைத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் கால்நடைத் துறையில் துணை மின் நிலையம் அமைய தடையில்லா சான்று வழங்கப்பட வேண்டும் என்பதால் இந்த திட்டப்பணி தாமதமாகிறது.
எனவே திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து துணை மின் நிலையம் அமைக்க தனி கவனம் செலுத்தி மாநில கால்நடை துறையிலிருந்து தடையில்லா சான்றிதழை செங்குன்றம் மின் வாரியத்திற்கு பெற்றுத் தந்து செங்குன்றம் சுற்று வட்டார பகுதி மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.