Monday, May 29, 2023
Home » செங்கல்பட்டில் பரபரப்பு; பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் பரிதாப பலி: உறவினர்கள் சாலை மறியல்

செங்கல்பட்டில் பரபரப்பு; பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் பரிதாப பலி: உறவினர்கள் சாலை மறியல்

by Neethimaan

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பிரசவத்திற்காக அனுமதிக்கபட்ட இளம்பெண் பரிதாபமாக பலியானார். இதையடுத்து, உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் இதுகுறித்து நீதி விசாரணை வேண்டும் எனக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (32). இவரது மனைவி பிரமிளா (29). கடந்த 3ம்தேதி நிறைமாத கர்ப்பிணியான பிரமிளாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கடந்த 4ம்தேதி பிரமிளாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, தாய் – சேய் இருவரையும் மருத்துவர்கள் வார்டுக்கு அனுப்பி உள்ளனர். அடுத்த நாள் மாலை 4 மணியளவில் பிரமிளாவிற்கு திடீரென வயிறு வீங்கி உள்ளது.

அதனால் அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி மீண்டும் ஆபரேஷன் செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி பிரமிளாவை அவரது உறவினர்கள் பார்க்க சென்றபோது, அவர் சுயநினைவு இன்றி இருந்துள்ளார். இதுகுறித்து, மருத்துவர்களிடம் கேட்டபோது, உரிய பதில் அளிக்கவில்லை என உறவினர்கள் புகார் கூறினர். தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேல் பிரமிளா கண் விழிக்கவில்லை. இதனிடையே, நேற்று‌ முன்தினம் இரவு டயாலிசிஸ் செய்த நிலையில், நேற்று காலை பிரமிளா உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், உடலை வாங்க மறுத்து, மருத்துவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பயிற்சி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் பிரமிளா உயிரிழந்து விட்டதாகவும், இதுகுறித்து நீதி விசாரணை வேண்டும் எனக்கோரி, சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi