செங்கம், மே 19: செங்கம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்வரன்(40). இவர் கடந்த 15ம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயமடைந்து இவரை ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாதேஸ்வரன் மூளைச்சாவு ஏற்பட்டது. இதனால் அவரது உறவினர்கள் மற்றும் மாதேஸ்வரனின் மனைவி கவிதா ஆகியோர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். அவரது இதயம் நுரையீரல் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல், சிறுநீரகம், கண் ஆகியவை ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் வேலூரில் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.
உயிரிழந்த மாதேஸ்வரனுக்கு இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அவரது சொந்த கிராமத்தில் நேற்று இறுதி சடங்கு நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை ஆர்டிஓ ரவிக்குமார், தாசில்தார் முருகன் மற்றும் வருவாய் துறையினர் இறந்த மாதேஸ்வரனுக்கு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அடக்கம் செய்யப்பட்டது.