திருவாரூர், ஏப். 22: திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுசூழல் துறையின் சார்பில் அரசின் விருது பெறுவதற்கு தகுதியுடைய பள்ளி, கல்லூரி மற்றும் வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் சார்பில் 2022-&23 நிதியாண்டுக்கான சட்டப் பேரவையில் மஞ்சப்பை விருதுகளை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இது வழங்கப்படும்.
இது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கேரிபேக்குகள் மற்றும் இவற்றிற்கு மாற்றாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு இந்தவிருதுவழங்கப்படும். முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2ம் பரிசாக ரூ.5 லட்சமும், 3ம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தங்களுடைய வளாகங்கள், சுற்றுப்புறங்கள் மற்றும் வளாக பகுதியை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியான திகழும் பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்கி கவுரவிக்க முன்வந்துள்ளது.
இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கலெக்டர் அலுவலக இணையதளத்தில் (https://Tiruvarur.nic.in) கிடைக்கும். விண்ணப்பபடிவத்தில் தனிநபர், நிறுவனத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு பிரதிகள் இரண்டை கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசிதேதி அடுத்த மாதம் (மே) 1ம் தேதி ஆகும். இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.