Wednesday, June 18, 2025
Home மாவட்டம்காஞ்சிபுரம் சுயதொழில் தொடங்குவதற்காக 60 மகளிர் பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் உதவித்தொகை : காஞ்சிபுரம் கலெக்டர் வழங்கினார்

சுயதொழில் தொடங்குவதற்காக 60 மகளிர் பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் உதவித்தொகை : காஞ்சிபுரம் கலெக்டர் வழங்கினார்

by Karthik Yash

காஞ்சிபுரம், மே 14: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுயதொழில் தொடங்குவதற்காக 60 மகளிர் பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் உதவித்தொகைக்கான காசோலைகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது. இக்கூட்டத்தில் கலெக்டர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 355 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர் கொடி நாள் 2022ம் ஆண்டு நிதி வசூலில் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் மற்றும் ரூ.5 லட்சத்துக்கு மேல் நிதி வசூல் செய்த அலுவலர்களுக்கு ஆளுநரின் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் தலைமைச்செயலாளரின் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சுயதொழில் தொடங்குவதற்கு 60 மகளிர் பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கலெக்டர் கலைச்செல்வி மோகன் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் உதவித்தொகைக்கான காசோலையை பெற்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த பாத்திமா கூறியதாவது: “நான் துணி வியாபாரம் செய்வதற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் கலெக்டரிடம் மனு அளித்திருந்தேன். முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலமாக எனக்கு சுயதொழில் தொடங்குவதற்கு ரூ.20,000க்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இதன்மூலம் நான் துணி வியாபாரத்தை பெரிய அளவில் கொண்டு சென்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவி செய்த தமிழ்நாடு முதல்வருக்கு, முஸ்லிம் மகளிர் சார்பில் “நிறைந்தது மனம்’’ திட்டத்தின் கீழ் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சீனிவாசன், உதவி இயக்குநர் (முன்னாள் படைவீரர் நலன்) சீனிவாசன், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi