சீர்காழி, மே 9: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதினத்துக்கு உட்பட்ட சட்டை நாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதர், தோனியப்பர், அருள்பாலித்து வருகின்றனர். இக்கோயிலில் திருஞானசம்பந்த பெருமானுக்கு, உமையம்மை ஞானப்பால் வழங்கிய ஐதீக நிகழ்வு திருமுலைப்பால் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 15 நாள் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருமலைப் பால் உற்சவம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது.
விழாவின் 8-ம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், சுவாமி – அம்மன், திருஞானசம்பந்தர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேரினை இழுத்தனர். கீழவீதியில் புறப்பட்டு நான்கு வீதிகளின் வழியாக திருத்தேர் வலம் வந்தது. வழியெங்கும் பக்தர்கள் சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர்.