சீர்காழி, மே 26: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சேந்தங்குடி செல்லியம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் மாரிமுத்து(47). இவரது வீடு நேற்று திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த நிர்மலா(42) என்பவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக சீர்காழி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.