சிவகாசி, மே 28: சிவகாசி சிவன் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாசியில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயிலில் வைகாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் பட்டர் சுப்பிரமணியம் கொடி மரத்தில் கொடியேற்றினார். சிறப்பு அலங்காரத்தில் விஸ்வநாதசுவாமி, விசாலாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். முன்னதாக கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஒவ்வொரு நாளும் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். அடுத்த மாதம் 2ம் தேதி திருக்கல்யாணமும், 4ம் தேதி தேரோட்டமும் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கலாராணி மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.