சிவகங்கை, ஜூன் 16:சிவகங்கை மாவட்டத்தில் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது குறித்து கடந்த 2015ம் ஆண்டு அதிகமான புகார்கள் எழுந்தன. 2015ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள் தொடர்பாக 28 வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டன.
2016ம் ஆண்டில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பாக 29வழக்குகளும், 2017ம் ஆண் டு 27 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. 2018ம் ஆண்டில் 27 வழக்குகள், 2019ம் ஆண்டில் 25வழக்குகள், 2020ம் ஆண்டு 62வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டன. 2021ம் ஆண்டில் போக்சோ பிரிவின் கீழ் 89 வழக்குகள் 2022ம் ஆண்டு 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023ம் ஆண்டு 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 600க்கும் மேற்பட்ட வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலுக்காக பதிவானவையாகும். மாவட்டத்தில் சப் டிவிசன் அடிப்படையில் உள்ள ஐந்து மகளிர் போலீஸ் ஸ்டேசன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்குகளில் சிவகங்கை மகளிர் ஸ்டேசனிலேயே அதிகபட்சமாக இந்த வழக்குகள் பதிவாகின்றன.
அடுத்தடுத்த எண்ணிக்கையில் மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் ஸ்டேசன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் அது தொடர்பான புகார்கள், வழக்குகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன.