சிவகங்கை, நவ.19: சிவகங்கை மறை மாவட்ட ஆயர்(பிஷப்) பொறுப்பேற்கும் திருநிலைப்பாட்டு விழா நவ.26அன்று நடைபெற உள்ளது. சிவகங்கை மறை மாவட்ட ஆயராக இருந்த சூசைமாணிக்கம் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து சிவகங்கை மறை மாவட்ட ஆயராக மதுரை மறை வட்ட அருள்பணியாளர் லூர்துஆனந்தம் கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். சிவகங்கை மறை மாவட்டத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே திருவரங்கம் கிராமத்தை சேர்ந்த லூர்துஆனந்தம் சிவகங்கை மறை மாவட்ட ஆயராக முறைப்படி பொறுப்பேற்கும் திருநிலைப்பாட்டு விழா நவ.26அன்று மாலை 4.30மணிக்கு சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
சிவகங்கை மறைமாவட்டம் தொடங்கப்பட்டு கடந்த 1987ம் ஆண்டு மற்றும் 2005ம் ஆண்டு இரண்டு ஆயர்களின் திருநிலைப்பாட்டு விழா நடைபெற்றுள்ளது. தற்போது மூன்றாவது ஆயர் பொறுப்பேற்கும் திருநிலைப்பாட்டு விழா 17ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு திருத்தந்தையின் இந்திய தூதர் லியோபோல்தோஜிரெல்லி முன்னிலை வகிக்கிறார். பேராயர் அந்தோணிபாப்புசாமி, ஆயர்கள் ஸ்டீபன் மற்றும் சூசைமாணிக்கம் ஆகியோர் திருச்சடங்குகளை நிறைவேற்ற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் தற்போது பணியில் உள்ள 18ஆயர்கள் உள்ளிட்ட 25 பேர் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயர்கள், பங்குத் தந்தைகள், அருட் சகோதரிகள், இறை மக்கள் உள்ளிட்ட சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.