Tuesday, June 17, 2025
Home மாவட்டம் சிவகங்கை ஜிஹெச்சில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

சிவகங்கை ஜிஹெச்சில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை

by Neethimaan

சிவகங்கை, மே 21: சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல், இருதயம், சிறுநீரக அறுவை சிகிச்சைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வருவோர் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கையில் கடந்த 2011ம் ஆண்டில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பதில் புதிய மருத்துவமனையும், 2012ல் மருத்துவக்கல்லூரியும் இயங்க தொடங்கியது. இங்கு தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகள் பிரிவில் 500 படுக்கைகள் உள்ளன. வெளி நோயாளிகள் பிரிவில் தினமும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தினமும் பல்வேறு பரிசோதணைக்காக வருகின்றனர். இங்கு விபத்தில் சிக்குபவர்களுக்கு நரம்பு பாதிப்பு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

இரண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேர விரயத்தால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. இதனால் வேறு வழியில்லாமல் பலர் தனியார் மருத்துவமனை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. ரத்தக் கசிவிற்கான அறுவை சிகிச்சை, ரத்தக்குழாய் துண்டிப்பு அறுவை சிகிச்சைக்கான மருத்துவர்களும் இல்லை. இதனால் இப்பாதிப்பு ஏற்பட்டவர்களும் முதலுதவி சிகிச்சையுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வசதி இல்லாததால் தீக்காயம், விஷம் சாப்பிட்டு கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும் மதுரை மருத்துவமனைக்கே அனுப்பப்படுகின்றனர். இதயம், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை. சிவகங்கை மாவட்டத்தில் அதிகமாக மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதால் அதில் பலத்த காயமடைந்தவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனை அனுப்பப்படுகின்றனர்.

தினந்தோறும் 10க்கும் மேற்பட்டோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். உயிர் பாதுகாப்பிற்கான சிகிச்சைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாமல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. வர்த்தக சங்க நிர்வாகி கூறியதாவது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்றால் அனைத்து நோய்களுக்கான மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் மிக முக்கிய தேவையான துறையான நரம்பியல், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட துறைகளுக்கே போதிய மருத்துவர் இல்லை. தினந்தோறும் உயிருக்கு போராடும் ஆபத்தான நிலையில் உள்ளவர்கள் போதிய மருத்துவ வசதி இல்லாமல் தொடர்ந்து மதுரைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். காலம் கடத்தாமல் நரம்பியல் உள்ளிட்ட முக்கிய துறை மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi