ஈரோடு, ஏப்.28: ஈரோடு வஉசி சிறுவர் பூங்காவில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகர பகுதிகளில் முக்கிய பொழுதுப்போக்கும் இடமாக வஉசி பூங்கா திகழ்கிறது. இப்பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக, சிறுவர்கள் பூங்காவில் குழந்தைகள் விளையாட ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்றுகள், சுற்றுலா பயணிகள் அமர்ந்து சாப்பிட ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதால், சிறுவர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், தினசரி 100க்கும் அதிகமான சிறுவர்கள் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக ராட்சத அரச மரம் ஒன்று உடைந்து சிறுவர் பூங்காவில் விழுந்தது. அந்த மரத்தை மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததால், மரக்கழிவுகள் மலைப்போன்று தேங்கி கிடக்கிறது. இதனால், விஷ ஜந்துகளின் மறைவிடமாக அப்பகுதி மாறி வருகிறது.
மேலும், ஆங்காங்கே புதர் மண்டிக்கிடப்பதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூங்காவில் உள்ள மரக்கழிவுகளை முற்றும் முழுவதுமாக அகற்றி, மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.