விழுப்புரம், ஜூலை 10: சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே தடுத்தாட்கொண்டூரை சேர்ந்த 15 வயது சிறுமி, 10ம் வகுப்பு வரை முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இதனிடையே கடந்த 7ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவரை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரியபகண்டை கிராமத்தை சேர்ந்த புஷ்பராஜ்(23) என்பவர் தங்களது மகளை கடத்தி சென்றிருப்பதாக கூறியிருந்தார். புகாரின்பேரில் புஷ்பராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.