தர்மபுரி, ஆக. 17: தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில் நடந்த மக்கள் குறைதீர் சிறப்பு முகாமில் நேற்று 87 மனுக்கள் மீது உடனடி தீர்வுகாணப்பட்டது. தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், எஸ்பி அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி இளங்கோவன் முன்னிலை வகித்தார். முகாமில், மாவட்டம் முழுவதும் 31 காவல் நிலையங்களில் இருந்து புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி, பொது வழி பிரச்னை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மொத்தம் 107 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 87 மனுக்கள் மீது விசாரணை முடித்து தீர்வு காணப்பட்டது. முகாமில் டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர்கள் கலைவாணி, ரங்கசாமி, சரவணன் மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் கலந்து கொண்டனர்.