Saturday, June 21, 2025
Home மாவட்டம்கடலூர் சின்னசேலம் அருகே நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து 60ம் கல்யாணம் முடித்து பெங்களூர் திரும்பியவர் பலி

சின்னசேலம் அருகே நின்ற லாரி மீது பஸ் மோதி விபத்து 60ம் கல்யாணம் முடித்து பெங்களூர் திரும்பியவர் பலி

by Karthik Yash

சின்னசேலம், ஜூன் 11: சின்னசேலம் அருகே 60ம் கல்யாணம் முடித்துவிட்டு பெங்களூரு திரும்பியபோது லாரி மீது பஸ் மோதி கணவர் பலியானார். இதில் உறவினர்கள் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
கர்நாடகா மாவட்டம் பெங்களூர் விஜயா நகர், சுபானா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரபாபு மகன் பிரஜ்வல் (33). பெங்களூரில் சூப்பர் மார்க்கெட்டில் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருடைய மாமனார் ரமேஷ் (60), மாமியார் பிரபலாம்பா ஒரே வீட்டில் வசித்து வந்தனர். ரமேஷ், பிரபலாம்பா தம்பதிக்கு சஷ்டியர் பூர்த்தி (60வது கல்யாணம்) நடத்த மருமகன் பிரஸ்வல் முடிவு செய்தார்.

இதையடுத்து கர்நாடகா அரசு பேருந்தை வாடகைக்கு பேசி அதில் பிரஜ்வல் குடும்பத்தினர், உறவினர்கள் என 44 பேர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். முதலில் திருவண்ணாமலை வந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு, பிறகு திருக்கடையூர் கோயிலுக்கு சென்றனர். அங்கு ரமேஷ், பிரபலாம்பா தம்பதிக்கு சஷ்டியர் பூர்த்தி செய்தனர். அதன்பிறகு அங்கிருந்து சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வந்து தில்லை நடராஜரை தரிசனம் செய்துவிட்டு, அன்றிரவே மீண்டும் பெங்களூரு செல்ல திட்டமிட்டு வேப்பூர் வழியாக சேலம் நோக்கி சென்றனர். பேருந்தை ராம் நகர் மாவட்டம் பசவனஹல்லியை சேர்ந்த மாரே கௌடா என்பவர் ஓட்டிச் சென்றார். அவருக்கு அருகிலேயே ரமேஷ் உட்கார்ந்து கொண்டு டிரைவருக்கு வழிசொல்லி வந்தார்.

பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நைனார்பாளையத்தில் உள்ள ஒரு பேக்கரி அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தபோது சாலையோரம் எந்தவித சமிக்கையும் இல்லாமல் நின்றிருந்த லாரி மீது மோதியது. இதில் ரமேஷ் கால் மற்றும் நெஞ்சில் பலத்த காயம் அடைந்தார். அவருடன் வந்த உறவினர்கள் பெங்களூரை சேர்ந்த பவன்குமார், அருண்குமாரி, தீபிகா, ராகுல், பிரஜ்வல் உள்ளிட்ட 8 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ரமேஷ் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் சிகிச்சையில் இருந்த பவன்குமார் உள்ளிட்டவர்கள் முதலுதவி பெற்று பெங்களூர் புறப்பட்டு சென்றனர். விபத்து குறித்து கீழ்குப்பம் காவல் நிலையத்தில் பிரஜ்வல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi