திருப்புவனம், ஜூலை 29: திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதன் முறையாக ஒரே ஒரு சிறுநீரகம் உள்ள பெண்ணுக்கு டாக்டர்கள் வெற்றிகரமாக பிரசவம் பார்த்தனர். திருப்புவனம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண்கள் சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இருந்தும் வருகின்றனர். வருடத்திற்கு 500 சுக பிரசவங்கள் வரை நடைபெறுகிறது. பெரும்பாலும் சுகப்பிரசம் மூலமாகவே குழந்தை பிறப்பு இருப்பதால் பலரும் சிகிச்சைக்கு விரும்பி வந்து செல்கின்றனர்.
திருப்புவனம் கோட்டைப்பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மனைவி நிவேதா லட்சுமி(24). இவர் தலைப்பிரவசத்திற்காக திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை குறித்து மகப்பேறு டாக்டர் வித்யா கூறுகையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிவேதாலெட்சுமியை பரிசோதனை செய்தபோது அவருக்கு பிறவியிலேயே ஒரே ஒரு சிறுநீரகம் அதுவும் வித்தியாசமான வடிவத்துடன் இருந்ததால் நார்மல் பிரசவத்திற்கு முயற்சி செய்தோம்.
குழந்தையின் தலையும் திரும்பாததால் வேறு வழியின்றி அறுவை சிகிச்சைக்கு என பிரத்யேகமான மருத்துவ குழுவினர் டாக்டர் துர்கா, செவிலியர்கள் சாந்தி, அன்பரசி ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட சிகிச்சையில் பெண் குழந்தை சராசரி எடையுடன் பிறந்தது. திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதன் முதலாக இதுபோன்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாயும் சேயும் நலமுடன் உள்ளனர் என்றார்.