உசிலம்பட்டி, ஏப். 24: உசிலம்பட்டியின் மையப்பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை, பூ மார்க்கெட், வாராந்திர ஆட்டுச் சந்தை உள்ளிட்டவை அமைந்துள்ளன. மேலும் எம்எல்ஏ அலுவலகம், அரசு நூலகம், வேளாண்துறை அலுவலகம் உள்ளிட்டவையும் இருக்கின்றன. இப்பகுதிக்கான சாலை பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது. இதில் கழிவுநீர் ேதங்கி சுகாதாரக்கேடும் ஏற்படுவதாக தெரிகிறது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உசிலம்பட்டி 58 கால்வாய் விவசாயிகள் சங்க விவசாயிகள், உள்ளிட்டோர் நேற்று உசிலம்பட்டி – பேரையூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த உசிலம்பட்டி போலீசார் போராட்டத்தில் பங்கேற்ற 30க்கும் மேற்பட்டோரை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
சாலையை சீரமைக்க வலியுறுத்தி மறியல்
0