க.பரமத்தி, நவ. 22: சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.8 உயர்ந்து ஏலம் போனது. கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய பகுதிகளான புன்னம், அத்திப்பாளையம், குப்பம், முன்னூர், தென்னிலை, மொஞ்சனூர், கார்வழி, அஞ்சூர், மற்றும் புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் உள்ள கிராமப்புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் விளையும் நிலக்கடலையை வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன்வராததாலும் வந்த ஒரு சிலரும் மிகவும் குறைந்த விலைக்கே கேட்பதால் விவசாயிகள் பலர் மலிவு விலைக்கு விற்க மனமில்லாமல் கடலையை காயவைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர்.
பிறகு மீதமுள்ள கடலையை மூட்டைகளாகக்கட்டி அருகேயுள்ள வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி, சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.
அங்கு நடந்த ஏலத்தில் 80 மூட்டை எடைக்குகாக நடந்த ஏலத்தில் நிலக்கடலை கிலோவிற்கு குறைந்த பட்சமாக ரூ.80க்கும், அதிக பட்சமாக ஒரு கிலோவிற்கு ரூ.90க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோ ரூ. 8 உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.