தண்டராம்பட்டு, செப்.20: தொடர் மழை காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது சாத்தனூர் அணை. 119 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக வலது மற்றும் இடது புறக்கால்வாய் மூலம் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் மழை பெய்து வருகிறது. அதேபோல், தென்பெண்ணை ஆற்று பகுதியிலும் மழை பெய்து வருவதால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, வினாடிக்கு 1,670 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 113.85 அடியாக உயர்ந்தது. அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.