பெரம்பலூர், ஜூன் 25: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் நூத்தப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட நெற்குணம் கிராமத்தில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தினந்தோறும் கிராம ஊராட்சிகளில் வீடியோ படக்காட்சிகள் நடத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட அரசு விழாக்களின் தொகுப்புகள் சிறு புகைப் படக் கண்காட்சிகளாக நடத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் தமிழக அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான புகைப்படக் கண்காட்சி வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், நூத்தப்பூர் ஊராட்சிக்குட்பட்ட நெற்குணம் கிராமத்தில் நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் மாவட்டக் கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சியினை சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். பார்வையிட்டவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.