திருப்பூர், பிப்.11: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் ஸ்வர்ணம் நடராஜன் வழிகாட்டுதலின் படி, தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வில் கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது: இளம் வயதில் பலர் போதை பொருட்களுக்கு அடிமையாகுவது அதிகரித்து விட்டது. சமுதாயத்தில் அதிக அளவில் குற்றங்கள் நடைபெறுவதற்கு போதைப்பொருட்கள் பயன்படுத்துவதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் தவறான பாதைக்கு செல்லாமல் இந்த வயதிலிருந்தே உங்கள் திறமைகளை வளர்த்து கொண்டு போதைப்பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.மேலும் இந்நிகழ்வில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர் சஞ்சய் போஸ் மற்றும் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அருணாச்சலம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். இறுதியாக பள்ளியின் ஆசிரியை சூரியகலா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வில் குற்றவியல் சட்ட உதவி மைய உதவி வழக்கறிஞர் சந்தியா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் உட்பட பல்வேறு மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.