ஈரோடு, பிப்.25: சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் ஈரோடு டவுன் அம்மாபேட்டை, கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், கோபி போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அரசு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த புதுக்கோட்டை மாவட்டம், பண்டுவகோட்டை, தெற்கு வீதியை சேர்ந்த வெற்றிவேலன் (28), ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்துள்ள சிங்கம்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் (56), கவுந்தப்பாடி குருமூர்த்தி காலனியை சேர்ந்த வேலு (32), சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்ந்த ரவி (45), அந்தியூரை அடுத்துள்ள பர்கூர், மேல் தெருவை சேர்ந்த பழனிசாமி (71) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 79 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.