Saturday, December 9, 2023
Home » சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தில் பொதுமக்களிடம் ₹150 கோடி மோசடி செய்த வாலிபர் அதிரடி கைது

சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தில் பொதுமக்களிடம் ₹150 கோடி மோசடி செய்த வாலிபர் அதிரடி கைது

by Karthik Yash

சங்கராபுரம், அக். 17: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மூரார்பாளையத்தை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக். இவரது 2வது மகன் சமீர் அஹமத். ஆட்டோ டிரைவர். பின்னர் சென்னைக்கு சென்று அங்கு ஒரு கம்பெனியில் கோல்ட் இன்வெஸ்ட்மென்ட் ட்ரேடிங் செய்து, பலரை ட்ரேடிங் செய்வதற்கு ஊக்குவித்து தங்கம் பரிசாக பெற்றார். இந்த டிரேடிங் மூலம் அதிக லாபம் சம்பாதிக்க நினைத்த சமீர், முரார்பாளையத்தில் குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனம் துவங்கினார். இவர் உயர் ரக கார்களில் வலம் வருவது, 10க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள், 5க்கும் மேற்பட்ட உதவியாளர்களுடன் டீ குடிக்க புதுச்சேரி, டிபன் சாப்பிட சென்னை செல்வது, மதிய உணவு சாப்பிட கோயம்புத்தூர் செல்வது என ஆடம்பரமாக சினிமா படத்தை மிஞ்சும் அளவுக்கு சமீர் மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

இவர் முரார்பாளையம் கிராமத்தில் ஆரம்பித்த கம்பெனிக்கு பல ஏஜெண்ட்டுகளை சேர்த்து அவர்களுக்கு என்ஃபீல்ட், ஆப்பிள் மொபைல், கோட் சூட் போன்றவற்றை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் ஏஜெண்ட்களின் உறவினர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலரை இதில் முதலீடு செய்யும் வகையில் திட்டத்தை வகுத்து ெபாதுமக்கள் மத்தியில் பெரிய கோடீஸ்வரன் போல் தோற்றத்தை அளித்துள்ளார். தனிநபராக ரூ.70 லட்சம் முதலீடு : இதனை நம்பிய பொதுமக்கள் நிலம், தோட்டம், அண்டா, குண்டா எல்லாம் அடகு வைத்து சமீர் கம்பெனியில் முதலீடு செய்தனர்.

அதில் ரூ. 1 லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் ரூ. 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகவும், ஒரு ஆண்டு முழுவதும் மாதம் ஒரு லட்சம் என 15 லட்சம் ரூபாய் கொடுத்தால் 24 லட்சமாக கொடுக்கப்படும் என கூறி பலரை முதலீடு செய்ய வைத்துள்ளார். அதேபோல மாதம் 15,000 ரூபாயை நான்கு முதல் 5 மாதங்கள் வரையில் சமீர் கொடுத்ததாக தெரிகிறது. இவர் மாதம்தோறும் 15ஆயிரம் ரூபாய் சரியாக கொடுத்து விடுவதை நம்பி ரூ. 1 லட்சம், 2 லட்சமென கொடுத்தவர்கள் ரூ. 5 லட்சம், 10 லட்சமென கொடுக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் தனி நபராக ரூ. 70 லட்சம் வரையில் கொடுத்துள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது.

உயர்ரக காரில் சுற்றுலா: கோடியின் உச்சிக்கு சென்ற சமீர் பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவு ஆகிவிடலாமென நினைத்து ஏஜெண்டுகளிடம் கார்களில் நான் செல்வதால் எனக்கு பேக் பெயின் வருவதால் ஹெலிகாப்டர் வாங்குவதற்காக சென்னைக்கு போய்விட்டு வருவதாக சொல்லிவிட்டு மக்களின் பணத்தை எடுத்துக் கொண்டு சென்னைக்கு சென்ற சமீர் திரைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இதனையடுத்து பலதரப்பட்ட உல்லாச வாழ்க்கை அனுபவித்து வந்த இவர் ஆடி, ரோல்ஸ் ராயல்ஸ், மினி கூப்பர், பிஎம்டபிள்யூ, ஜாகுவார், என உயர் ரக கார்கள் மட்டுமின்றி பைக்குகளிலும் சொந்த ஊரில் வலம் வந்த இவர் வெளிநாடுகளில் சுற்றுலா பயணம், கப்பலில் சுற்றுலா என தலைமறைவாகவே இருந்து வந்தார்.

பணம் கொடுத்த பொதுமக்கள் சமீரிடம் தொடர்பு கொண்டு கேட்டால் தன்னிடம் பணம் இருப்பதை வீடியோவாக எடுத்து சிவாஜி படத்தில் வருவது போல இந்த ரூபாய் நோட்டை கொடுத்தால் தான் பணம் தருவார்கள் பணம் என்னிடம்தான் உள்ளது என அனைவருக்கும் வீடியோவை அனுப்பி உள்ளார். இதனை பார்த்த ஏஜெண்டுகள் பணம் தருவார் என நம்பிய நிலையில், பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். கம்பெனி ஆரம்பித்து பணத்தை ஏமாற்றிவிட்டு சென்ற சமீரை மூரார்பாளையம் பகுதி ஏஜெண்டுகள் சென்னையில் உள்ள தனியார் கார் விற்பனையகத்தில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.

இதனையடுத்து முரார்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்த 1,500க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் தங்களிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறும், பணத்தை என்ன செய்தாய் என சமீரிடம் கேட்டதற்கு பணம் பத்திரமாக இருக்கிறது. பணத்தை முக்கிய அரசியல் மற்றும் சினிமா சார்ந்த பிரமுகர்களிடம் கொடுத்து இருப்பதாகவும் அவர்கள் குறித்து வெளியில் சொல்லக்கூடாது எனவும் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் அங்கு குவிந்ததால் தகவல் அறிந்த சங்கராபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமீர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?